Uncategorized|

மகளிர் சுய உதவிக்குழுவில் தொடங்கி, பேருந்தில் அலாரம் வரை பெண்களுக்கான திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் :

பெண்களின் நலனை பேணும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசானது, பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பதை அந்த நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.முத்தமிழறிஞர் கலைஞர் காலம் தொடங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த 36 மாத கால ஆட்சி வரை திமுக ஆட்சியில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்!

முத்தமிழறிஞர் கலைஞர் காலம் :

மகளிருக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது, மகளிருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது, மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில் இடஒதுக்கீடு தந்தது, பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தது என பெண்கள் முன்னேற்றத்துக்கான முன்னோடி திட்டங்களை தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலங்களில் செயல்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கடந்த 36 மாத கால ஆட்சியில், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், மாணவிகள் உயர்கல்வி கற்க ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூள் கிளப்பி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம் :

இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்த பெருமை திமுக ஆட்சிக்கு தான் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாகும். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில், 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட பொருளாதாரத் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை இலக்காக கொண்டு தாம் செயல்பட்டு வருவதாக மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு இடங்களில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மகளிர் உதவி மையம் :

குடும்ப பிரச்சனை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்க தமிழ்நாடு அரசின் சார்பில் ‘181 மகளிர் உதவி மையம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதேபோல் அரசு மாநகரப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, தவறான கண்ணோட்டத்துடன் பெண்களை ஆண்கள் உரசினால் அலாரம் ஒலி எழும் வகையில் அரசு டவுன் பஸ்களில் பட்டன் அமைத்திருப்பது என பெண்கள் பாதுகாப்புக்கான பணிகள் நீள்கின்றன.

மகளிருக்கான முக்கிய திட்டங்கள் :

  • பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
  • அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு என ஒதுக்கீடு தந்து, அதை இப்போது 40 விழுக்காடாக உயர்த்தியிருக்கிறோம்.
  • உள்ளாட்சித் தேர்தலில், முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
    இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
  • ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள்.
  • ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியது.
  • ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தது.
  • டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்,
    மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம்.
  • டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம்.
    அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்.
  • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்.
    மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை.
  • “புதுமைப் பெண்” என்னும் திட்டத்தின் மூலம் மாதம் தோறும் 1000 ரூபாய்.
    1 லட்சத்து 83 ஆயிரத்து 389 மாணவிகளுக்கு 82 கோடியே 77 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை.
  • பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு 1கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.

இப்படி எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.இன்றைய காலக்கட்டத்தில், அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்கான திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தொடர்ந்து தீட்டி வருகிறது.

Comments are closed.

Close Search Window