Uncategorized|

உலகத் தமிழின உன்னத வரலாற்றில் உயர்ந்து நின்ற தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்த முதல்வர்:

உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த அண்ணா 1969–பிப்ரவரி 3-ம் நாள் மறைந்தபின் அவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்புடன் மறைந்த முதல்வர் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழகத்தை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நவீன தமிழகத்தின் சிற்பியாக விளங்கி, உலக வரலாற்றில் உன்னதப் புகழ்ச் சின்னமாகத் திகழும் கருணாநிதி 95-ஆம் வயதில் 2018 ஆகஸ்ட் 7-ம் நாள் மறைந்து, அண்ணாவின் நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பிப்ரவரி – 26 ஆம் நாளன்று திறந்துவைத்து சிறப்பு சேர்த்தார்.

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் & புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள்:

அண்ணா, கலைஞர் ஆகிய இருபெரும் தலைவர்களின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் அண்ணா படிப்பது போன்ற சிலையும், வலதுபுறம் இளங்கோவடிகள் மற்றும் இடதுபுறம் கம்பர் சிலைகளும், நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகளும், இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியமும் அமைந்துள்ளன.

அண்ணாவின் தம்பி:

“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.” எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணா துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றவுடன், மறைந்த முதல்வர் கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையும், கலைஞர் சதுக்கமும் அமைந்துள்ளன. இச்சதுக்கத்தில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, கலைஞருக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. சதுக்கத்தின் பின்புறம் கலைஞரின் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிரும் வண்ணமும் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் உலகம் :

இந்த சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் கலைஞர் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
மேலும், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறையில் கருணாநிதியின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், அவரது படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்துள்ளன.“உரிமைப் போராளி கலைஞர்” எனும் அறையில், தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி உரையாற்றும் காட்சி, தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

 

கோபாலபுரமும் கலைஞரும் :

அடுத்ததாக, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், உடனடியாக புகைப்படம் கிடைக்கும் வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வலப்புறத்தில் கருணாநிதியின் மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட 8 நூல்களின் பெயர்கள் மீது நாம் கை வைத்தால் அந்த நூல்கள் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு எடுத்துரைக்கும்.
கலைஞரின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட 8 நூல்களின் பெயர்கள் மீது நாம் கை வைத்தால் அந்த நூல்கள் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு எடுத்துரைக்கும்.

அரசியல் ஞானி கலைஞர் :

“அரசியல் கலை அறிஞர் கலைஞர்” எனும் அறையில் சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றி வியக்க வைக்கும் .“சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” எனும் அறையில், திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய ரயில் நிலையங்களைக் கடக்கும் போது, அந்தந்த ஊர்களில் கருணாநிதியின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.

அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடையில் இருபுறங்களிலும், பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்புகளில் அமைந்த அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கலைஞர் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. அதற்கு நேர் எதிரே, மறைந்த முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் தோன்றும் புகைப்படம் பெரிய அளவில் அமைந்து “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. மேலும், இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் நூல்களும் – பொன்மொழிகளும்:

இச்சதுக்கத்தில் கருணாநிதி எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், வரும் வழியில் தமிழர்களின் கலாச்சார மையம், வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய கருணாநிதி படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கருணாநிதியின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Close Search Window