Uncategorized|

காவிரி நீரும்!
திமுக நடத்திய உரிமைப் போரும்!

காவிரி விவகாரம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 9-10-2023 அன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தனித்தீர்மானம்:

காவிரி விவகாரத்தில் செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருவதாக குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவையில் 9-10-22 அன்று தனித் தீர்மானத்தை முன் மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்துக்கு இதுவரை 9.19 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டிய நிலையில் இதுவரை 2.18 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. காவிரி ஆற்றில் செயற்கையான நெருக்கடியை கர்நாடகம் உருவாக்கி வருகிறது என்றும் காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டும் முதல்வர் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்காக போராடி வருகிறோம். சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம் என்றார்.

காவிரி நதிநீர் உரிமையைக் காக்கும் கடமையை நோக்கிய சிந்தனை:

தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய, காவிரி நதிநீர் உரிமையைக் காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை, எண்ணத்தை இன்னும் சொன்னால் கட்டளையை இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், காவிரி நதி நீர் உரிமையைக் காப்பதில், திமுக என்றும் எப்போதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

மேட்டூர் அணை:

இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு, காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்துவிடப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜுன் 12ம் நாளன்று திறக்கப்பட்டது. 2022ம் ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24ம் நாளன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதால், காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.

இதன் பயனாக 2021-22ம் ஆண்டில், 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23ம் ஆண்டில், 45.9 லட்சம் டன் அளவிலும், காவிரிப் பாசனப் பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையைப் படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்திப் பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டு தொடர்ந்தது. இந்த ஆண்டில் ஜுன் 1, 2023 நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில்கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்துக்காகத் திறந்துவைத்தோம்.” என்று பேசினார்.

உரிய தண்ணீரை இந்த மாதம் வழங்கவில்லை

கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய, உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்துவிடவில்லை. இதுதொடர்பாக எடுத்த முயற்சிகளை, விரிவாக சொல்ல வேண்டியதை நான் எனது கடமையாக கருதுகிறேன். கடந்த ஜுன் மாதத்தில், பிலுகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டிஎம்சிக்குப் பதிலாக 2.28 டிஎம்சி மட்டுமே வரப்பெற்றோம். இதனைத்தொடர்ந்து 3.7.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதவாரியாக ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வழங்கவேண்டிய நீரினை உடனடியாக வழங்கிட கர்நாடகாவுக்கு உத்தரவிடமாறு வலியுறுத்தினார். மீண்டும் 5ம் தேதியும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், 2023-24 பாசன ஆண்டானது, ஒரு பற்றாக்குறை ஆண்டு என ஒரு காரணத்தைக்கூறி, இதன்பிறகும் கர்நாடகா நமக்கு அளிக்கவேண்டிய நீரினை வழங்கவில்லை.

குறுவைப் பயிர் பாதிப்பு:

இதனால், குறுவைப் பயிர் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், 19.07.2023 அன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதவாரியாக தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அறிவுறுத்துமாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து ஜுலை 20ம் தேதியன்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மீண்டும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தினார்.

இதன்பின்னரும், கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. ஜுலை 27ம் தேதியன்று கர்நாடகாவின் 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும், அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டு சராசரியில் 51 விழுக்காடாக இருந்தபோதிலும், பிலிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது. இதைச் சுட்டிக்காட்டி தமிழகத்துக்கு உடனடியாக நீர் வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கோரப்பட்டது.” என்று காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

தமிழ்நாடு மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்:

தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களிலும், காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டங்களிலும், தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால், 2023-24 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும்போதிலும், 1.06.2023 முதல் 3.10.2023 வரை பிலிகுண்டுலுவில் 46.1 டிஎம்சி நீர் பெறப்பட்டுள்ளது. இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைப் பாசனத்தின்படி, நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், எஞ்சி உள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று குறுவைப் பயிரையும் அடுத்து நடவு செய்யப்படவுள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன்காக்க, மத்திய அரசை வலியுறுத்தி, இந்த தீர்மானத்தை இப்பேரவை நிறைவேற்ற வேண்டும் என கோரினார்.

எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காமல், வாதிட்டுப் பெற்றுத்தருவோம்:

தமிழக மக்களின் உணவுத் தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர் தேவைக்கு அவசியமானது காவிரி நீர். அதை தமிழக மக்களுக்குப் பெற்றுத்தருவதில், எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காமல், வாதிட்டுப் பெற்றுத்தருவோம். மத்திய அரசு இதில் முறையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். இதற்கான அனைத்துவிதமான முயற்சிகளையும் திமுக அரசு செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கிறேன். அதே உணர்வுடன், இந்த தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில், நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கூறி உரையை முடித்தார்.

Comments are closed.

Close Search Window