40 மாத திராவிட மாடல் ஆட்சியில் உணவு/ கூட்டுறவு/ நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் புதிய திட்டங்கள்:
- தமிழ்நாட்டில் நெல், அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களின் இருப்பு நிலவரங்களை எப்போதும் சீராக நிர்வகித்திட உதவும் வகையில் வெளிச்சந்தை வர்த்தக உட்பட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1956 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி 23/02/1972 அன்று நிறுவப்பட்டது.
- தமிழ்நாட்டு மக்களுக்கு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியது உட்பட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டில் இருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
- ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. கடந்த 40 மாதங்களில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய பணிகள் விவரம் :
உணவுப் பொருள் வழங்கல் துறை குறை தீர்ப்பு பணிகள்!
- மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட 1 இலட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிவாரணத் தொகையாக ரூ.4000 வீதம் 2 கோடியே 8 லட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 726 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
- அத்தியாவசிய பொருட்களை தகுதியான பயனாளிகளுக்கு அளிக்கும் பொருட்டு கைவிரல் ரேகை பதிவு முறை ஏற்படுத்தப்பட்டு ஆதார் எண்கள் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு :
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொது மக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாயவிலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
- 31/12/2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புற சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாயவிலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு :
- 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபையினால் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறுதானிய உணவுத் திருவிழா நிகழ்ச்சிகள் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு மக்களிடையே சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்பட்டது.
- விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும், காலதாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1 கோடியே 8 இலட்சத்து 35 ஆயிரத்து 621 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விருப்பப்படி அரிசிக்கு பதில் கோதுமை :
அரிசி பெரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் 10 கிலோ வீதமும் ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாயவிலைக் கடைகளின் இருப்பை பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்கு பதிலாக கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவரை 7 இலட்சத்து 23 ஆயிரத்து 482 மெட்ரிக் டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்தபோது திராவிட மாடல் அரசு வழங்கிய நிவாரணம் :
கடந்த 2023 ஆம் ஆண்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வீதம் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி 23 லட்சத்து 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு ரூபாய் 1,390.92 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
தென் மாவட்டங்கள் புயலால் பாதித்த போது வழங்கப்பட்ட நிவாரணம் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி 17/12/2023 – 18/12/2023 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையினால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள் / பாத்திரங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த 6 லட்சத்து 36 ஆயிரத்து 971 குடும்பங்களுக்கு ரூ.6000 மற்றும் 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், இதர வட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மொத்தம் 13 லட்சத்து 34 ஆயிரத்து 561 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம் 92 சதவீத பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கருணை அடிப்படையில் நியமனங்கள் :
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணியின் போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 233 பேர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த பணியாளர் நிரந்தரம் :
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் பருவ கால பணியாளர்களாக பணிபுரிந்து வந்தவர்களுக்கு 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 591 பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கட்டடங்கள் :
திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு படிப்படியாக கட்டடங்களை கட்டி வருகிறது. 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமான பணிகள் பல்வேறு நிலையங்களில் முன்னேற்றத்தில் உள்ளன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருணை மனம் :
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல் கூட வீணாக கூடாது என்ற கருணை மனதோடு 358.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 259 மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ ஆணையிட்டு உள்ளார்கள். அதன்படி 213 நெல் சேமிப்பு தலங்கள் கட்டப்பட்டு எஞ்சியவை கட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு :
புதுடெல்லியிலுள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்பு கிடங்குகளை பதிவு செய்ததற்காக தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது. இப்படி ஒவ்வொரு துறையிலும் பாராட்டுகளை பெற்றவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு உணவுத்துறையில் தன்னிறைவு அடைவதற்காக புதிய பல திட்டங்கள் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சாதனைகள் நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.